Thursday, March 7, 2013


பெண்ணின் பெருமை 

பெண்ணென்ற சொற்றன்னைக் கேட்ட போழ்தே 
பெண்னையோர் நிற்றின்பப் பொருளாய்க் கொண்டு 
எண்ணித்தான் பெண்ணினத்தை இயன்ற மட்டும் 
இழிவாக ஏசுகின்ற இற்றை நாளில் 
பெண்ணினத்தின் பெருமையை உணர்ந்து கொண்டு 
பெருந்தவற்றை உடன்விடுத்து இப்போ திங்கு 
மண்ணகத்தில் பெண்ணினத்தின் பெருமை போற்றல் 
மதியுடையோர் செயலாகு மன்றோ சொல்வீர்.

நல்வழியைப் புகன்றிட்ட ஔவைப் பாட்டி 
நன்னெறியில் கற்புடைய சிலம்புச் செல்வி 
இல்வாழ்வைத் துறந்துலகில் அறத்தைக் காத்த
எழிலரசி மேகலையும் ; மற்றும் நன்றாய் 
பல்சுவையில் இன்னமுதாம் பாடல் யாத்த 
பாவரசி சரோசினியார் ; இந்த மண்ணில் 
நல்லாட்சி புரிந்த  இந்தி  ராவும்;
நங்கையர் குலத்திற்கே பெருமை யன்றோ ? 

சிங்கார நடைபயின்று மழலை ஈந்து 
சிரிக்கவைக்கும் சின்னஇளங் குழந்தை யாவாய்
தங்கணவன் இன்பதுன்ப வாழ்வில் எல்லாம் 
தன்னேரில் துணையாக ஆவாய் நன்று.
பொங்குகின்ற தன்னழகால் கணவர்க் கின்ப 
பொற்றமிழ்போல் இன்பமூட்டும் மனைவி யாவாய் 
தங்கம்போல் பாதுகாத்து அன்பை யூட்டும்
தாயாவாய் அனைத்துமாவாய் பெண்ணே வாழி.....!

வையகத்தில் வாழ்கின்ற மக்கள் தம்மை 
வளர்த்திட்டாய் அன்புடனே தாயாய்த் தோன்றி 
உய்கின்ற நெறிசொன்னாய்; ஒழுக்கம் சொன்னாய் .
உயிரிடத்துப் பற்றுவேண்டும் என்றே கூறி
கையெடுத்து வணங்குகின்ற தெய்வ மாகி 
கருனையோ டன்பிரக்கம் அருளு மீந்து 
பொய்யனாக வாழாதே என்றே கூறிப் 
புகட்டினாய் அறிவைத்தான் பெண்ணே வாழி.

தாய்மார்கள் தம்மக்கள் தம்மை நன்கு 
தகுதியோடு வளர்த்திடவே தவறி விட்டால் 
தாய்நாட்டில் நல்லோரை வல்லோர் தம்மை 
தகைசான்ற அறிஞரினைக் காண்ப தேது
மாய்ந்திட்டான் தன்செல்வன் களத்தி லென்று 
மற்றோரால் அறிந்திட்ட வீரத் தாயும் 
பாய்ந்திட்டாள் களம்நோக்கி  மார்புப் புண்ணை
பார்த்தவளும் மகிழ்ந்திட்டாள் ,அறிந்த தொன்றே !


பெற்றெடுத்த தாய்நாட்டை உயிரின் மேலாய் 
பேணுகின்ற மொழிதன்னை எந்த நாளும் 
வற்றாத பெருங்கடலை உலகை யெல்லாம்
வருந்தாமல் தாங்குகின்ற மண்ணை விண்ணில் 
சுற்றுகின்ற நிலவுதன்னை ,மலையைக் ,காற்றை, 
சுழன்றோடும் பேராற்றை உலகந தன்னில் 
மற்றுமுள்ள இயற்கையை எலலாம் பெண்ணாய் 
மதியுடையோர் போற்றிடுவர் உண்மை யன்றோ ?

வாழைத்தீங் கனியழுகின் குப்பை சேரும்
வஞ்சியர்கள் தவறிவிட்டால் உலகம் தூற்றும் 
தாழையில் மனமின்றேல் தலையில் சூடார் 
தரங்கெட்ட பெண்களினை யாரும் போற்றார் 
கோழையால் நாட்டிற்கு என்ன நன்மை 
குறைபட்ட பெண்ணாலே பெருமை யேது
பாழ்பட்ட உணவுதான் நமக்கு வேண்டாம்
பண்புகெட்ட பெண்கள்நம் நாட்டில் வேண்டாம்.

அருங்கலைகள் அனைத்தையும் கற்றல் வேண்டும்
ஆண்களோடு போட்டியிட்டு வளர்தல் வேண்டும்
பெரும்பணிகள் யாவிலும் பெண்கள் வீற்று 
பூவையர் குலம்நன்கு தழைக்க வேண்டும்
அருள்நிறைந்த நெஞ்சினராய் வாழ்தல் வேண்டும்
அன்புநெறி வையகத்தில் நிலைத்தல் வேண்டும்
வருநாளில் நமதுநாடு செழித்து வாழ 
வன்மையுள் நல்லோரை ஈதல் வேண்டும்.