Saturday, November 27, 2010

ஓய்வு

துடிக்கின்ற நாடிக்குச் சாவில் ஓய்வு
          துள்ளுகின்ற இளமைக்கு முதுமை ஓய்வு
சுடுகின்ற கதிருக்கு இரவில் ஓய்வு
          சுடர்கின்ற நிலவுக்குப் பகலில் ஓய்வு
தொடுகின்ற செயலுக்கு வெற்றி ஓய்வு
          துன்பமுறும் மனதுக்கு இன்பம் ஓய்வு
கொடுக்கின்ற கரங்களுக்கு இன்மை ஓய்வு
           குதித்தாடும் உடலுக்கு உறக்கம் ஓய்வு


எழுந்துவரும் கடலலைக்குக் கரையில் ஓய்வு
           இருண்டுவரும் மேகத்திற்கு மழையில் ஓய்வு
எழுதுகின்ற தேர்வுக்குத் தேர்ச்சி ஓய்வு
           இருவர்தம் காதலுக்கு மணத்தால் ஓய்வு
பழுதுற்ற நெஞ்சுக்கு அமைதி ஓய்வு
           பசிக்கின்ற வயிற்றுக்கு உணவால் ஓய்வு
உழவனுக்கு அறுவடையின் மகிழ்ச்சி ஓய்வு
           உருவான கருவுக்குப் பேற்றில் ஓய்வு


திரைக்காட்சி காண்போருக்கு இடையில் ஓய்வு
           தெருப்பிச்சை எடுப்போர்க்கு ஏது ஓய்வு ?
அரசுவேலை ஓய்வதுதான் ஐம்பெத்தெட்டில்
            அறுபதில்தான் ஆசைக்கு ஓய்வு என்பர்
எரிகின்ற நெருப்புக்கு நீரால் ஓய்வு
             இளமையில் ஓய்வின்றி உழைத்தல்  நன்று
வரவுதனில் ஓய்வின்றி உழைத்துச்சேர்த்தால்
             வறுமைதான் ஓய்வுபெறும் சிறக்கும் வாழ்வு ! 

Saturday, November 20, 2010

வெண்ணிலவு

வெண்ணிலவே! தண்நிலவே! வானம் தன்னில்
விடியவிடிய உலாவந்து முகத்தைக் காட்டு;
கண்ணான எம்வீட்டு மழலைப்  பூக்கள்
களிப்புடனே சோறுண்ண முகத்தைக் காட்டு;
பெண்ணவளின் முகவனத்தில் மெருகை யூட்ட
பிரித்தளித்து உன்பொலிவில் மங்கி னாயோ?
விண்ணில்உன் பிறை,நிறையாம் சிரிப்பைக் கண்டு
பித்தனான கவிஞன்தன் கவிதைப் பூவே!