Tuesday, December 14, 2010

தேர்தல்

தேர்தல்தான் வந்ததம்மா தமிழர் நாட்டில்
தெருவெல்லாம் முழக்கந்தான் விழாவின் கோலம்
யாராண்டால் என்னவென்ற நிலையை மாற்றி
எல்லோரும் தவறாமல் வாக்குச் செய்வோம்
நீர்ப்பங்கில் தொழில்வளத்தில் உரிமை காத்து
நீண்டகால வேலைக்கு வாய்ப்புக் கண்டு
சீரான வளர்ச்சிதனை நகர்போல் சிற்றூர்
சேரிகளும் பெற்றிடத்தான் ஆட்சி காண்போம் .

கள்ளவாக்கு கறுப்புவாக்கைத் தடுத்தல் வேண்டும்
கணக்காக நல்லவாக்கு விழுதல் வேண்டும்
உள்ளத்தில் தூய்மையும் ஓயாத் தொண்டும்
ஊழலற்ற ஆட்சிக்கு துணையாய் நின்று
எள்ளளவும் நேர்மைக்குப் பங்க மின்றி
எளிமையாய் என்றென்றும் வாழ்ந்து காட்டி
தள்ளாடா உறுதியோடு கொள்கை காக்கும்
தரமான நல்லவரைத் தேர்வு செய்வோம்.

பணத்துக்கு வாக்களிக்கும் பழக்கம் வேண்டாம்
பாசாங்காய் நடித்தேதான் வென்ற பின்னர்
பணத்துக்கு அலைவோரைப் படுக்க வைப்போம்
பாமரரும் நிமிர்ந்துவாழ தொண்டு செய்யும்
குணத்துக்கு உரியவரைத் தேடிக் காண்போம்
கொடுத்திட்ட உறுதிமொழி காத்து ,நன்றி
உணர்வுடைய பண்பினரை;ஐந்து ஆண்டும்
ஓடியாடி உழைப்பவரை ஆளச்செய்வோம்.

No comments:

Post a Comment